அமெரிக்காவை சாடியுள்ளார் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு!
Wednesday, September 14th, 2016
அமெரிக்கா, சிரியா, ஈரான் உட்பட மேலும் சில உலக நாடுகள் மனித உரிமை மீறல்ளை விசாரணை செய்வதற்கு தமது ஆணையகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையாக சாடியுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டைமுன்வைத்திருக்கின்றார்.
44 நாடுகள் அங்கம் வகிக்கம் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயீத் ராத் அல் உசைன், மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெற்றுவரும் குவான்டனாமோ சித்திரவதைமுகாமை பார்வையிட அமெரிக்க தொடர்ந்தும் ஐ.நா அதிகாரிகளுக்கு மறுத்து வருவது குறித்து கடும் விசனத்தை வெளியிட்டார்.
அதேபோல் சிரியா ஈரான் ஆகிய நாடுகள் மீதும் தனது அதிருப்தியை வெளியிட்ட அவர் மனித உரிமைகள் விடையத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து செயற்படுவதுடன், ஐ.நா அதிகாரிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கமைய இந்த 33 கூட்டத்தொடரின் போது எதிர்வரும் வியாழக்கிழமை 15 ஆம் திகதி நடைபெறும் அமர்வின் போது இலங்கை விவகாரம் ஆராயப்படவுள்ளது. இதன்போது குறிப்பாக காணாமல்போனோர் விவகாரம் குறித்து ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜயம்செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல்போகச் செய்தலுக்கு எதிரான நடவடிக்கைக் குழு தனது அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளது.
இதற்கமைய இடம்பெறும் விவாதத்தின் போது ஜெனிவாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ரவிநாத ஆரியசிங்க காணாமல்போனோர் விவகாரத்தை அணுக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவார் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் அரசாங்கம் செயற்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிகப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தொடர்பாகவும் அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு எடுத்துரைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|