IPL T-20 லீக் நாளை ஆரம்பம்!

Friday, April 8th, 2016

உலகிலுள்ள மிகப்பெரிய உள்ளூர் இருபதுக்கு-20 லீக் தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர், நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி, இவ்வாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்கெதிராக, மும்பை வன்கெடே மைதானத்தில் மோதும் போட்டியுடன், இவ்வாண்டுக்கான தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 2 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால், இம்முறை தொடர், வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாறியுள்ளது.

டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்கு சகீர் கானும் குஜராத் லயன்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கு டேவிட் மில்லரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கௌதம் கம்பீரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு றோகித் ஷர்மாவும் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்கு மகேந்திரசிங் டோணியும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விராத் கோலியும் சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஷீகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.

இம்முறை இலங்கை வீரர்களில் லசித் மலிங்க, திஸர பெரேரா இருவரும் மாத்திரமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களாகக் காணப்படுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக லசித் மலிங்கவும்  றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் சார்பாக திஸர பெரேராவுமே இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில், லசித் மலிங்கவின் உடல்நிலை தொடர்பான சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்ற நிலையில், திஸர பெரேரா மாத்திரமே இத்தொடரில் பங்குபற்றும் ஒரே இலங்கையராக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: