IPL தொடர்: டெல்லியை வென்றது கொல்கத்தா!

Tuesday, April 17th, 2018

சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோரது அபார பந்துவீச்சில் சிக்கிய டெல்லி அணி 129 ஓட்டங்களில் சுருண்டு தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.

சுனில் நரேன் ஒரு ரன்னிலும், லின் 31 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா(35), தினேஷ் கார்த்திக்(19) ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகினர்.

அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ஓட்டங்களும், ஆந்ரோ ரஸ்ஸெல் 12 பந்தில் 41 ஓட்டங்களும் குவித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்கு 200 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீர், ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர்.

கொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி திணறியது. ரிஷப் பந்த், டி வில்லியர்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர்.

பந்த் 26 பந்தில் 43 ஓட்டங்களும், டி வில்லியர்ஸ் 22 பந்தில் 47 ஓட்டங்களும் எடுத்து அவுட்டானார்கள். எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் சீரான இடைவெளியில் வெளியேறினர்.

இதனால் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Related posts: