2வது போட்டியிலும் வென்றது இந்தியா!

Tuesday, June 14th, 2016

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டோனி தலைமையிலான இந்திய இளம் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது ஒருநாள்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு சிபாண்டா அதிகபட்சமாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில், சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரண், குல்கரனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு கடந்த போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 33 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த கருண் நாயர் நிதானமாக ஆடி 39 ஓட்டங்கள் குவித்தார். ராயுடு தன் பங்கிற்கு 41 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் இந்தியா 26.5 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 129 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது

Related posts: