2ஆவது போட்டியிலும் நீஷம் இல்லை!
Thursday, September 29th, 2016
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் நீஷம் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உபாதை, இன்னமும் குணமாகாத காரணத்தாலேயே இந்நிலை ஏற்பட்டது.
நீண்டகாலமாக உபாதைக்குள்ளாகி, இத்தொடருக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நீஷம், முதலாவது போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற பயிற்சிகளில், விலா என்பில் உபாதைக்குள்ளாகியிருந்தார். இதையடுத்து, முதலாவது போட்டியில் அவர் பங்குபற்றாததோடு, 2ஆவது போட்டியில் பங்குபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2ஆவது போட்டியில் அவர் பங்குபெற மாட்டார் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 3ஆவது போட்டியில் அவர் விளையாடுவதும் சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிறெய்க்குக்குப் பதிலாகக் குழாமில் சேர்க்கப்பட்ட ஜீதன் பட்டேல், இங்கிலாந்திலிருந்து வரவிருந்த விமானம், இரத்துச் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று நள்ளிரவே அவர் இந்தியாவைச் சென்றடைந்தார். எனவே, நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்தியாவின் காலநிலைக்குத் தன்னை தயார்படுத்துவதற்கு, ஜீதன் பட்டேலுக்கு சுமார் 35 மணித்தியாலங்கள் மாத்திரமே உள்ளன. எனவே, இந்நிலைமையும், நியூசிலாந்துக்குப் பாதகமாக அமைந்துள்ளது.
ஆனாலும், நாளை மறுதின போட்டிக்கான ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்தாலொழிய, 3 சுழற்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கவே, நியூசிலாந்து விரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, ஜீதல் பட்டேல், இப்போட்டியில் விளையாடுவார் எனக் கருதப்படுகிறது.
Related posts:
|
|