வில்லியர்ஸ் 8 வருடங்களுக்கு பின்னர் அரைச்சதம் அடிக்காத முதல் தொடர் !

Tuesday, June 28th, 2016

தென்னாபிரிக்காவின் முன்னணி வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸூக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு தொடர் மோசமானதொரு தொடராக அமைந்துள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரும், அதிரடி வீரருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் தலைசிறந்த உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். தற்போது வரை ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

தனது அபார துடுப்பாட்டத்தால் பந்து வீச்சாளரை பீதியடைய வைக்கும் இவர், மைதானத்தில் எந்த பக்கமும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர். ஆகையால் இவரை செல்லமாக ‘360 டிகிரி’ என்று அழைப்பார்கள்.

32 வயதாகும் ஏ.பி.டி 2004 ஆம் ஆண்டு தனது 20 வயதில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

அறிமுகமானதிலிருந்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2009 இல் இருந்து நட்சத்திர வீரராக திகழ்ந்தார். ஒருநாள் போட்டியில் அபார துடுப்பாட்டத்தால் ரசிகர்களை வசியப்படுத்தினார்.

பந்தை நாலாபுறம் பறக்க விட்டு ஓட்டங்களை வாரிக்குவித்த இவர் 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8742 ஓட்டங்களை குவித்துள்ளார். சராசரி 53.63 ஆகும். 24 சதம், 48 அரைசதங்கள் விளாசியுள்ள ஏ.பி.டி அதிகபட்சமாக 162 ஓட்டங்களை குவித்துள்ளார்.

2008 இற்கு பின்னர் 3 போட்டிகளுக்கு மேல் கொண்ட தொடரில் குறைந்தது ஒரு அரைசதமாவது விளாசுவார். இப்படி பெயர் வாங்கிய ஏ.பி.டி இற்கு நேற்றோடு நிறைவடைந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடர் சரியாக அமையவில்லை. அவர் ஓட்டங்கள் அடிக்க திணறியதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மொத்தம் ஆறு லீக் போட்டிகளில் விளையாடிய அவர் முறையே 31, 22, 39, 27, மழையினால் ஆட்டம் இல்லை, 2 என ஓட்டங்களைப் பெற்றிருந்தார். சுமார் 8 வருடங்களுக்கு பின்னர் அரைச்சதம் அடிக்காமல் விட்ட முதல் தொடர் இதுவாகும்.

Related posts: