ரொனால்டோ அபாரம்: சமநிலையில் முடிந்த ஸ்பெயின் – போர்த்துகல் மோதல்!

Saturday, June 16th, 2018

உலக கிண்ண கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற போர்த்துகல் ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கிண்ண தொடரின்‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் – ஸ்பெயின் அணிகள் தொடரின் மூன்றாவது ஆட்டமாக மோதின.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.அதில் அந்த அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா இரண்டாவது கோல் அடித்தார்.

58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோலாகும். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.

அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில் கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கொல் அடித்தார்.

இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

Related posts: