பங்களாதேஷ் தொடர்; பொதுவான இடத்தில் நடத்த மோர்கன் வலியுறுத்து!

Thursday, July 7th, 2016

 

டாக்கா தாக்குதலை அடுத்து பங்களாதேஷ் தொடரை பொதுவான இடத்தில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்று இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் பங்களாதேஷ் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பங்களாதேஷ் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபது-20 அணியின் தலைவர் மோர்கன் கருத்து தெரிவிக்கையில்,

“பாதுகாப்பு மிகப்பெரிய விடயம். பங்களாதேஷ் தொடரை பொதுவான இடத்தில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த விடயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தான் முடிவு எடுக்க முடியும்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபைதலைவர் நஸ்முல் ஹசன் கருத்து கூறுகையில், “இது எதிர்பாராமல் நடந்த சம்பவமாகும். இங்கிலாந்து அணி வருவதற்கு இன்னும் 3 மாதம் உள்ளது. அதற்குள் நிலைமை சீரடைந்து விடும். இங்கிலாந்து அணி திட்டமிட்டப்படி பங்களாதேஷ் வரும் என்று நம்புகிறேன்” என்றார்.

Related posts: