நடுவர்களின் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு: உள்ளூர் தொடரிலிருந்து விலகிய யுனிஸ்!

Tuesday, April 26th, 2016

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான யுனிஸ் கான், பாகிஸ்தானின் உள்ளூர் தொடரான பாகிஸ்தான் கிண்ணத்திலிருந்து சர்ச்சைக்குரிய விதத்தில் விலகியுள்ளார். அத்தொடரில் விளையாடும் 5 அணிகளில் ஒன்றான கைபெர் பக்துங்க்வா அணியின் தலைவராகச் செயற்பட்ட யுனிஸ் கான், அத்தொடரில் நடுவர்களால் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக முரண்பட்டிருந்தார்.

நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக, அதுகுறித்த விசாரணைகளுக்கு வருமாறு போட்டி மத்தியஸ்தரால் அழைக்கப்பட்ட நிலையில், அதற்குச் சமுகமளிக்க யுனிஸ் கான் தவறியிருந்தார். இதனையடுத்து, அவரது போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தொடரில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பாக அதிருப்தியடைந்த யுனிஸ் கான், இத்தொடரிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதை, அவரது அணியின் முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.

இவ்வாறான சூழ்நிலையில், இத்தொடரில் தன்னால் விளையாட முடியாது என அவர் உணர்வதாகவும், அதனால் அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்த அணியின் முகாமையாளர் முக்தார் ஹூஸைன், இத்தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு, அணியின் தலைவராக அஹ்மட் ஷெஷாத் செயற்படுவார் எனத் தெரிவித்தார்.

Related posts: