தோல்விக்கு காரணம் சொல்லும்: விராட் கோஹ்லி!

Thursday, November 22nd, 2018

அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைய ரிஷப் பண்ட்டின் அவுட் தான் காரணம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியுற்றது. கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இந்திய வீரர் ரிஷாப் பண்ட், 10 பந்தில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ரிவர்ஸ் ஸ்விப் ஆடி அவுட் ஆனார்.

இதுவே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக அணித்தலைவர் கோஹ்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

‘இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற போட்டி. இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.

நாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால், மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதால் ரன் குவிப்பு ஸ்தம்பித்தது. இறுதியில் ரிஷாப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருக்கும்போது, வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம்.

ஆனால் ரிஷாப் பண்ட் ஆட்டமிழந்ததும் மீண்டும் பின்தங்கிவிட்டோம். தொடக்க வீரர்களில் தவான் மிகவும் வலுவான வீரர். இதுவரை டி20யில் அவர் சதம் அடிக்கவில்லை. ஆனால், அவரது ஆட்டம் உண்மையிலேயே அணிக்கு பலன் தருவதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: