தொடரை வென்று இந்திய அணி சாதனை!

Saturday, August 11th, 2018

இலங்கையில் நடைபெற்று வந்த இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.முதலில் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் சேர்த்தது.

அந்த அணியின் தொடக்க வீரரான பெர்னாண்டோ 95 ஓட்டங்களும் 4-வது வீரராக களம் இறங்கிய நுவாநிது பெர்னாண்டோ 56 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கிய நிலையில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 128 பந்தில் 114 ஓட்டங்கள் குவித்தார்.

மற்ற வீரர்களும் பொறுப்பாக ஆடியதால் இந்தியா 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய இளையோர் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Related posts: