தொடரை தக்கவைத்தது இந்தியா: அவுஸ்ரேலியா தோல்வி!

Saturday, September 24th, 2022

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.

நாக்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டி, ஆரம்பமாவதற்கு முன்னதாக மழைக் குறுக்கிட்டதால், போட்டி 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வேட் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பின்ஞ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 91 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 7.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 3 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்

000

Related posts: