இளம் வீரர்களை கொண்ட அணியே சம்பியன்ஸ் கிண்ணத்தை எதிர்கொள்கிறது!

Sunday, May 28th, 2017

இங்கிலாந்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை ஒரு கத்துக்குட்டி அணியாக இருக்கப்போகின்றது என்கிற விதத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றார் தலைவர் அஞ்சலோ மெதியூஸ்.

கடந்த 2002ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணத் தொடரில் இணை சம்பியனாகியிருந்த இலங்கை அணி, அதனை அடுத்து வந்த ஆண்டுகளில் (2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இறுதியாக இடம்பெற்ற) ஒரு தடவை மாத்திரம் சம்பியன்ஸ் கிண்ண தொடரின் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.

இம்முறை, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காணப்படும் குழுவில் இலங்கை அணி மோதுகின்றது. இலங்கை அணியின் தலைவரான மெதிவ்ஸ் இம்முறை தனது அணி கிண்ணத்தினை வெல்லும் அணிகளில் ஒன்றாக அனைவரினாலும் கருதப்படாததை ஏற்றிருப்பினும், தமது அணிக்கு கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருப்பதில் உறுதியாக இருப்பதாக தனது நம்பிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

அனைத்து அணிகளினையும் முழுமையாக எடுத்து பார்க்கும் போது, கடந்த மாதங்களில் நாங்கள் இங்கேயும், அங்கேயும் பல சிறு தோல்விகளையும் ஏமாற்றங்களையும் காண்பித்திருக்கின்றோம். உண்மையாக கூறப்போனால், யாருமே எமக்கு ஒரு வாய்ப்பினை தர இருக்கவில்லை.

இத்தொடரில் கத்துக்குட்டி அணிகளில் ஒன்று போல பிரவேசிக்கின்றோம். ஆனாலும் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஏனெனில், இலங்கையிலும் இங்கிலாந்திலும் கடந்த நாட்களில் இத்தொடரிற்காக கடும் முயற்சிகளையும், பிரயத்தனங்களையும் மேற்கொண்டு உழைத்திருக்கின்றோம். அது எமக்கு சிறப்பாக அமைந்திருந்தது. அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சிப் போட்டியில் நாம் நல்ல ஆட்டத்தினை காட்டி விளையாடவிருக்கின்றோம். அதன் மூலம் எமக்கு நல்லதொரு பயிற்சி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

அனைத்து அணிகளும் முழுமையாக காணப்பட்டிருப்பினும், போட்டியின் நாளில் குறைந்தளவான தவறுகளை காட்டும் அணியே வெற்றி பெறும். அது இங்கிலாந்தாகவும் இருக்கலாம், இல்லை இலங்கையாகவும் இருக்கலாம் அல்லது வேறொரு நாடாகவும் இருக்கலாம். அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. யாரும் ஒருவருடை நிலைமை இதுதான் என்பதை எழுதிக்காட்டிவிட முடியாது. அடுத்து நடைபெற இருக்கும் தொடர் அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பும் பரபரப்பும் மிக்க தொடர் ஒன்றாக அமையும் என்பதிலும் நம்பிக்கையாக இருக்கின்றேன்.”

என இலங்கை அணியின் தலைவர் மெதிவ்ஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.

29 வயதாகும் மெதிவ்ஸ், 2014ஆம் ஆண்டில் 3- –2 என இங்கிலாந்தினை வீழ்த்தி சாதனை வெற்றி அடைந்த இலங்கை அணியில் அங்கம் வகித்த வீரர்களில் ஒருவராக காணப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை எடுத்துப் பார்க்கும் போது சற்று வித்தியாசமாக அமைகின்றது. இது பற்றி கருத்து தெரிவித்த மெதிவ்ஸ் தமது அணி பெற்றிருக்கும் அனுபவங்களினை தமக்கு சாதமாக உபயோகித்துக்கொள்வார்கள் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆரம்ப அனுபவங்களினை மாத்திரம் பிரயோகிக்க கூடிய அணிகளில் ஒன்றாகவே நாம் தற்போது இருக்கின்றோம். இங்கிலாந்தினை பொறுத்தவரை நாம் சிறந்ததொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தோம். முக்கியமாக, 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரினை குறிப்பிட முடியும். எனவே, நாங்கள் அதேபோன்று இம்முறையும் துளிர்விட்டு செயற்பட முயற்சிப்போம்.

எம்மிடம் இளம் வீரர்களைக் கொண்ட அனுபவம் குறைந்த அணியாக காணப்படுகின்றது. சில வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றனர். ஆனால், இருக்கும் அனைவரும் போட்டியின் போக்கினை எத்தருணத்திலும் மாற்றும் ஆற்றல் மிக்கவர்கள். எம்மிடம் திறமை இருக்கின்றது. இனி அதனை வெளிப்படுத்தி எம்மை நிரூபிப்பது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது

என்று மெதிவ்ஸ் இலங்கை அணியின் துடுப்பாட்டம் பற்றி தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை மீண்டும் பெற்றுக்கொண்டிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு இத்தொடரில் முக்கியமான ஒருவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரையில் முழுமையாக ரி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி வரும் மாலிங்க இத்தொடரினை முழு உடற்தகுதியோடு களம் காண இருப்பதாக மெதிவ்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், 33 வயதாகும் வேகப்பந்து வீச்சாளரான அவர் இவ்வகையான நீண்ட ஓவர்கள் போட்டியிலும் தொடர்ந்து சாதிப்பார் என நம்பிக்கையினையும் வெளியிட்டிருந்தார்.

மாலிங்க முழு உடற்தகுதியுடன் காணப்படுகின்றார். அவரை வரும் போட்டிகளில் முழுமையாக உபயோகித்து செயற்படவிருக்கின்றோம். அவர் கடந்த காலங்களில் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடாது காணப்பட்டாலும் அநேகமான .பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினை வைத்திருப்பது எமக்கு மிகவும் உபயோகமானதாக காணப்படுகின்றது. அதே போன்று, பயிற்சிகளிலும் அவர் சிறப்பாக செயற்படுகின்றார்

Related posts: