இலங்கை பயிற்சியாளர் ஹத்ருசிங்கா வேதனை!
Thursday, November 22nd, 2018இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்த போதும் கோட்டை விட்டுவிட்டதாக, இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்ருசிங்கா கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்று இழந்தது.
சொந்த மண்ணிலே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் தொடர் இழந்தது குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹத்ருசிங்கா கூறுகையில், இந்த தோல்விகளுக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்.
இதற்கு முன்னர் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை மிகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி 2-0 என நாம் கைப்பற்றினோம். இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்த போதும் துரதிஷ்டவசமாக வெற்றிகளை தவறவிட்டோம்.
முக்கியமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இதுபோன்ற ஆடுகளங்களில் நாணய சுழற்சியின் முடிவுகள் எதிரணிக்கு சாதகமாகும் போது, எங்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறைவாகின்றன.
இந்த தொடரை பொருத்தவரை நாம் மிகவும் பின்னடைவில் உள்ளோம் என்று நம்பவில்லை. இந்த தவறுகளை இலகுவாக திருத்திக்கொள்ள முடியும்.
விடப்பட்ட தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவோமானால் நிச்சயமாக வெற்றிகளை பெற முடியும் என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|