ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் கிரிக்கெட் !

Tuesday, March 5th, 2019

ஆசிய விளையாட்டில் 2014ஆம் ஆண்டோடு கைவிடப்பட்ட கிரிக்கெட் போட்டி, 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010, 2014ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. ஆனால், தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் ஆசிய விளையாட்டிற்கு அணியை அனுப்பவில்லை.

அதனைத் தொடர்ந்து, இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது.

இதில் 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடக்கும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதில் இடம்பெறுவது 50 ஓவர் போட்டியா? அல்லது டி20 போட்டியா? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், இதனை வரவேற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவை வரவேற்றுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா கூறுகையில்,

‘2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கு அணிகளை அனுப்ப வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்துவோம். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் இந்திய அணியால் பதக்கம் வெல்ல முடியும். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: