அசத்திய ரொனால்டோ: வெற்றி பெற்ற போர்ச்சுக்கல்!

Saturday, September 14th, 2019

யூரோ கால்பந்து தகுதிச்சுற்றில் லிதுவேனியாவுக்கு எதிரான போட்டியில், ரொனால்டோ 4 கோல்கள் அடித்ததன் மூலம் போர்ச்சுக்கல் அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டு நடக்கிறது.

இந்தத் தொடரில் பங்கேற்க தற்போது தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் லிதுவேனியாவில் உள்ள LFF மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் போர்ச்சுக்கல்-லிதுவேனியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ, அபாரமாக கோல் அடித்து தனது கணக்கை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் லிதுவேனிய வீரர் வைடவுடாஸ் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி 1-1 என சமனில் இருந்தது.

ஆனால், இரண்டாம் பாதியில் ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பம்பரமாக சுழன்று ஆடிய அவர் அடுத்தடுத்து கோல் அடித்தார். ஆட்டத்தின் 61, 65 மற்றும் 76வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். பின்னர் போர்ச்சுக்கலின் வில்லியம் கார்வால்ஹொ கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடிக்க, போர்ச்சுக்கல் அணி 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Related posts: