மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

Thursday, June 8th, 2017

இன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக் கொடுக்கிறது.

தொடர்ந்து டெக்ஸ்ட் செய்துகொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ எனப்படும் நோய் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதனால் கட்டை விரல்கள் பலவீனமடைந்து அழற்சிகள் ஏற்படும் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன, தொடர்ந்து கட்டைவிரல் இயக்கப்படும் வேளையில் கீல்வாத நிலைக்கு தள்ளப்பட்டு வலியையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட்போன் எந்த அளவு நன்மைகளை தருகிறதோ அதை விட பல மடங்கு தீமைகளையும் கக்குகின்றன. ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ கட்டைவிரலை வளைக்கும் தசைநூலில் வீக்கத்தை ஏற்படுத்தி மூட்டுகளை தளர்வானதாக்குறது என மயோ கிளினிக்கின் உயிரியல்மருத்துவ பொறியியலாளர் குழு தெரிவித்துள்ளது.

கைகள் மற்றும் மணிக்கட்டுக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ‘ஸ்மார்ட்போன் தம்ப்’- ஐ கட்டுப்படுத்த முடியும். அதற்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

பல ஸ்மார்ட்போன்கள் ஆட்டோகரெக்ட் தன்னியக்க அம்சத்தை உள்ளடக்கிய கீபோர்ட்களைக் கொண்டிருக்கின்றன, இதைப் பயன்படுத்தி தட்டச்சு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் தசைநாண் அழற்சிகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

ஒரே கையில் ஸ்மார்ட்போனை பிடித்துக்கொண்டும் அதே கையில் உள்ள கட்டைவிரலை பயன்படுத்தி டைப் செய்யும் போது கட்டைவிரலுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு விளைவால் விரல்களில் வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை உடனே அணுகும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related posts: