களவாடப்பட்ட புத்தரின் காலடி கற்சிற்பம் பாகிஸ்தானிடம் மீள ஒப்படைப்பு!
Saturday, April 30th, 2016பாகிஸ்தானிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்ட மிகப்பழைய பௌத்த சின்னமான கற்சிற்பம் ஒன்றை அமெரிக்கா பாகிஸ்தானிடம் மீண்டும் கையளித்துள்ளது.
சமய அடையாளங்களுடன் புத்தரின் பாதத் தடங்களை சித்தரிக்கும் இந்தக் கற்சிப்பம் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
பாகிஸ்தானின் வடமேற்கேயுள்ள ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இச்சிற்பம் கடத்தப்பட்டது.
பழம்பெரும் இந்தக் கற்சிற்பத்தை டோக்கியோவிலிருந்து அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற அருங்கலைப் பொருட்களை விற்கும் ஜப்பானிய வர்த்தகர் ஒருவர் களவாடப்பட்ட பொக்கிஷத்தை வைத்திருந்ததான குற்றத்தை ஏப்ரலில் ஒப்புக் கொண்டார்.
நியூ யார்க்கில் நடைபெறவிருந்த ஏலம் ஒன்றில் இந்தச் சிற்பம் ஒரு மில்லியன் டாலர்கள் அளவுக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னர் ஏலத்தை நிறுத்தி, அதைக் கைப்பற்றிய அமெரிக்க அதிகாரிகள், பின்னர் பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனர்.
புத்தரின் பாதத் தடங்களைக் கொண்ட இந்தச் சிற்பம் பாகிஸ்தானின் கலாச்சார வரலாற்றின் முக்கியாமான ஒன்று என அதைப் பெற்றுகொண்ட பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி ஒருவர், அச்சிற்பம் சிறிதுகாலம் நியூயார்க்கில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அது காட்சிப்படுத்தப்படுவது குறித்தும் ஆராயப்படும் என நியூ யார்க்கிலுள்ள பாகிஸ்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலுள்ள தொல்பொருட்களை பாதுகாக்கும் ஆசையிலேயே பகுதியளவில் இதனை வைத்திருக்க தான் உந்தப்பட்டதாக பழம்பொருட்கள் வர்த்தகரான டட்சுஜோ காகு தெரிவித்தார்.
ஆனாலும் அவரது கருத்துக்களை புறந்தள்ளியுள்ள வல்லுனர்கள், அதை பாதுகாப்பதற்கு பாகிஸ்தானில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அபராதமாக 5000 டாலர்களை செலுத்திய காகு அமெரிக்காவை விட்டு சொந்த விருப்பில் வெளியேறினார்.
Related posts:
|
|