ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய நுண்ணிய கமரா உருவாக்கம்!

ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய அளவிலான மிக நுண்ணிய கமராவை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஒரு உப்புத் துகள் அளவு கொண்ட இந்த கமராவை மருத்துவ சேவைகளுக்கும், இரகசியக் கண்காணிப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்தி இந்த கமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.இரண்டு தலைமுடிகளின் அகலம் கொண்ட கண்ணாடி இழைகளில் பொருத்தக்கூடிய இந்த கமராவிலுள்ள லென்ஸ்கள் தலா 0.1 மி.மீ. அகலம் கொண்டது.
இதனைக் கொண்டு 3 மி.மீ. தொலைவிலிருக்கும் பொருட்களையும் துல்லியமாகக் காண முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இதில் பொருத்தப்பட்டுள்ள 1.7 மீட்டர் நீள கண்ணாடி இழைகள், கமரா படம் பிடிக்கும் காட்சிகளை மின் வடிவில் கடத்தி திரைக்குக் கொண்டு வருகின்றன.
இந்தக் கெமராக்கள் மருத்துவத்துறைக்கு மிகவும் பயன்படக்கூடியவை. உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறியும் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளை இந்த கமராக்கள் மிகவும் எளிமையாக்கும் என நம்பப்படுகிறது.
இந்தக் கமராக்களை ஊசி மூலம் மூளைக்குள் செலுத்தியும் பரிசோதிக்கலாம். இதுமட்டுமின்றி, கண்காணிப்புப் பணிகளுக்கு இந்த கமராக்கள் பேருதவியாக இருக்கும். கண்ணுக்குப் புலப்படாத கண்காணிப்புக் கெமராக்களாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
இந்த ஆய்வின் வெற்றி, மருத்துவ சேவை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
Related posts:
|
|