இயேசுவின் கல்லறை முதல்முறை படம்பிடிப்பு!
Friday, November 4th, 2016இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின் அவரது உடல் வைக்கப்பட்ட சுண்ணாம்பு பலகை முதல் முறை படம்பிடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த கல்லறை கி.பி 1555 க்கும் மேலான காலத்தில் முதல் முறையாக கடந்த வாரமே திறக்கப்பட்டது. அந்த கல்லறை மீண்டும் மூடப்படுவதற்கு முன்னர் விஞ்ஞானிகளுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள 60 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த கல்லறையை மூடியிருந்த பளிங்கு பலகை திறக்கப்பட்டபோது, ஏதன்ஸ் பல்கலைக்கழக மற்றும் நெஷனல் ஜியோக்ரபிக் விஞ்ஞானிகள் சுண்ணாம்புக் கல்லறையை மூடும் வகையில் இரண்டாவது பளிங்கு பலகை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெரூசலம் திருக்கல்லறைத் தேவாலயத்தில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்பு பணியின்போதே இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் கல்லறையை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு அரிதான வாய்ப்பு கிடைத்தது.
பல நூற்றாண்டுகால சேதங்களுக்கு பின்னரும் இயேசு கல்லறை இன்றும் பாதுகாப்பான முறையில் இருப்பதை இட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியை வெளியிட்டனர்.நெஷனல் ஜியோக்ரபிக் சஞ்சிகையின் தொல்பொருள் ஆய்வாளர் பிரெட்ரிக் ஹைபேர்ட் குறிப்பிடும்போது, “நான் உண்மையில் வியப்படைந்தேன். நான் இதனை எதிர்பார்க்கவில்லை. எனது முழங்கல்கள் சற்று நடுங்கின. எம்மால் 100 வீதம் உறுதி செய்ய முடியாதபோதும் இந்த கல்லறை இருக்கும் இடம் காலாகாலமாக மாற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதை கண்களால் பார்த்த ஆதாரங்களைக் கொண்டு கூற முடியும்” என்றார்.
கிறிஸ்தவ உலகின் மிக புனிதத்திற்குரிய இயேசு கல்லறை 1555 தொடக்கம் அல்லது அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்து பளிங்கு உறை ஒன்றால் மூடப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் முறை திறக்கப்பட்ட இந்த பளிங்கு உறை கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி மீண்டும் மூடப்பட்டது. இந்த கல்லறை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததாகவும் அவர் கல்லறை காலியாக இருந்ததை அவரது சீடர்கள் பார்த்ததாகவும் கி.பி முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுவிசேஷ வேதகாமக் குறிப்புகள் கூறுகின்றன
Related posts:
|
|