முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் நியமனம்!

Monday, December 9th, 2019


கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.

அதனால் அவர் ஜனாதிபதி செயலகத்தால் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் ஜனாதிபதியால் நாளை இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கான அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல உள்ளார். அவரின் இராஜாங்கச் செயலராக சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.

மூத்த தமிழ் நிர்வாக அதிகாரியான சந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கிளிநொச்சிக்கு மாற்றம் வழங்குமாறு கேட்டுள்ளார் என்று அறியவருகின்றது.

எனினும் ஜனாதிபதியின் தீர்மானத்தின் படியே புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார் என்று பொது நிர்வாக அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

Related posts: