தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, October 29th, 2019


நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா, தென், மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவமற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு தெற்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில் (மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்) கடும் மழை / இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல் மற்றும் காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோமீற்றர் வரை திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts: