வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பொலிசார் அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021

மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர் மாகாணங்களுக்கிடையில் பயணங்களில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய கடமைகளுக்காக செல்வோர் தமது கடமைக்கான அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேபோன்று உற்சவங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் நடத்துவோர் தொடர்பில் கடும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவர்கள் சட்டவிரோத குற்றம் புரிந்தவர்கள் என கருதப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேவை நிறுவனங்களில் பணிகளுக்காக சமுகமளிக்கும் நபர்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருக்கும் போது அந்த பிரதேசத்தில் பயணத் தடை முழுமையாக அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் கடமை சார்ந்த விடயங்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ அந்த பிரதேசத்தில் இருந்து வெளியே செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: