வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க பணிப்பு – ஜனாதிபதி!

Wednesday, December 26th, 2018

வடமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநருக்கும் மாகாண அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருமளவு வெள்ள அச்சுறுத்தலுக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முகங்கொடுத்துள்ளதுடன் அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உலர் உணவு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடுகள் பாதிப்புக்குள்ளாகாதவர்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறுகின்றபோது உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு உதவும் வகையில் ஆரம்ப கட்டமாக 10 000 ரூபா வழங்குவதற்கும் நட்டங்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் அதிகபட்சம் 250 000 ரூபா வரையில் நிதியுதவியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம் மாவட்டங்களில் சுமார் 8 000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அக்காணிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலா 40 000 ரூபா நட்டஈடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அசுத்தமடைந்துள்ள வீடுகள் வியாபார நிலையங்கள் கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டங்களை மாகாணத்தின் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

முப்படையினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் நோயாளிகளை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts: