விடுதலை செய்ய எனக்கு அதிகாரமில்லை – அமைச்சர் சுவாமிநாதன்!

Wednesday, August 23rd, 2017

அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அமைச்சின்கீழ் அதற்கான அதிகாரம் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அமைச்சின் கீழ் இந்த விடயத்தைக் கையாள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமாயின் கைதிகள் விவகாரத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தனர்.

இரவு வேளையில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு வழங்கிய உத்தரவை மீறிப் பயணித்த போதே அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட பொலிஸார் கூறியிருந்தனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மூன்றாம் வருட மாணவர்களான எஸ்.சுலக்ஷன் மற்றும் என்.கஜன் ஆகிய மாணவர்கள் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில், சுலக்ஷனின் குடும்பத்தினருக்கு புதிய வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு அரசு தீர்மானித்திருந்ததோடு, மீள்குடியேற்ற அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டிருந்தது.புதிய வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று யாழ். கொக்குவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், நல்லாட்சி அரசில் எவர் தவறிழைத்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: