வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது: யாழ்.மேல் நீதிமன்ற  நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

Monday, December 5th, 2016

யாழ். சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை கைதான பொலிஸ் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இன்று திங்கட்கிழமை(05) தெரிவித்துள்ளார்.

கடந்த-2010 ஆம் ஆண்டு நவம்பர்-26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்திருந்தார். பின்னர் அவரது சடலம் கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. குறித்த குற்றச் சாட்டின் பேரில் கைதான ஏனைய இருவரும் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனப் பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் ஏற்கனவே மல்லாகம் நீதிமன்ற நீதவான்  ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் அங்கு சாட்சியமளிக்கையில் நாம் சம்பவ தினத்தன்று மாவீரர் தினம் அனுஸ்டித்தோம் எனத் தெரிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுக் கொடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுக் கொடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டோம்.

எம்முடன்  கைது செய்யப்பட்டவரில் ஒருவர் மரணமடைந்து விட அவரது சடலத்தைப் பொலிஸார் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் வீசியதாகத் தெரிவித்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது பொலிஸாரின் பெயர்களையும் நீதிவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

இதன் பிரகாரம் மல்லாகம் நீதவான் யூட்சன் ஒன்பது பொலிஸாருக்கும் அழைப்பாணை விடுத்திருந்தார். எனினும், பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் பொலிஸாருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு எட்டுப் பொலிஸார் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கு மல்லாகம் நீதவானால் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. எனினும், சம்பவத்தில் இறந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டமையால் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது ஒன்பது பொலிஸார்களில் ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது  டிசம்பர்- 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எட்டுப் பேரும் யாழ். மேல் நீதிம்னற நீதவான் மா.இளஞ்செழியன் இன்று திங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணைக்கு ஏழாவது எதிரியாகக் கருதப்படும் விஜயரட்ணம் கோபி கிருஷ்ணன் என்ற பொலிஸ் அதிகாரி தற்போது கனடாவில் வசித்து வருவதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அரச சட்டத்தரணியால் மன்னரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட நீதவான் சந்தேகநபர் மீது சர்வதேச  பிடியாணையைப் பிறப்பித்தார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் மூன்றாவது எதிரியாக அடையாளம் காணப்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த தயாளன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் நற்சான்றுப் பத்திரம், மற்றும் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸ் அதிகாரி விடுப்பில் சென்றமைக்கு ஆதாரமான பதிவேட்டு அறிக்கை என்பன மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், குறித்த பதிவேட்டு அறிக்கையில் சந்தேகநபர் விடுப்பில் சென்ற திகதி மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நேரங்கள் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்ததுடன் மேற்படி பதிவேட்டின் உண்மைத் தன்மை தொடர்பிலும் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டு அறிக்கையைப் பறிமுதல் செய்து பொலிஸ் அதிகாரியின் விடுப்புத் தொடர்பான அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டடார்.

இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையின் பிரதியைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு மூன்றாவது எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி மன்றுக்குக் கோரிக்கை முன்வைத்தார். சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் இது தொடர்பான அறிக்கையின் பிரதியைச் சட்டத் தரணிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு முடியும் வரை பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதவான் எதிர்வரும் ஜனவரி மாதம்- 10 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

18

Related posts: