வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!
Thursday, October 10th, 2019நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களின் பெயர்களை அகர வரிசைப்படி முறைப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு கடந்த தினம் அனுப்பிவைத்திருந்தது.
இந்த நிலையில், சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் தினங்களுக்குள் அச்சிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 26 அங்குல நீளமானதாகும்.
ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதும், நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதும் இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.
இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை விநியோக்கிக்கும் பணிகள் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.
எல்பிட்டி தொழில் பயிற்சி மத்திய நிலையத்தில் இருந்து இந்தப் பணிகள் இடம்பெறுவதாக காலி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் யு.கே. சந்ரலால் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான முடிவுகள் நாளை இரவு 10 மணியளவில் வெளியிடப்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|