வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, August 11th, 2023

வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் 36 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது :

கடந்த வருடம் இலங்கை தொழிற்சங்க அமைப்பின் வருடாந்த மாநாட்டின் போது நாடு இருண்ட நிலையில் இருந்தது .

அப்போது உங்களில் பலருக்கு இலங்கையின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி இருந்தது. ஆனால் உங்கள் அனைவரின் ஆதரவால், எங்களால் அதை மாற்ற முடிந்தது. அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.ஒழுங்கான பொருளாதார நிர்வாகத்தை நாம் மேற்கொண்டால், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட முடியும்.

ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்ளும் வரை பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடவில்லை. அதனால்தான் பொருளாதாரச் சிக்கல் வளர்ந்தது.

அரசியல் தலைவர்கள் பொருளாதாரம் தொடர்பான சரியான முடிவுகளை எடுக்கத் தயங்கியதால் நிலைமை மேலும் மோசமானது. மேலும் இந்த பொருளாதார நெருக்கடியை மக்கள் கடுமையாக உணர்ந்தனர். அவர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில போராட்டங்கள் வேறு கோணத்தில் இருப்பதை போராட்டத்தின் நிறைவில் காண முடிந்தது. இந்நிலையில் தலைமைத்துவ வெற்றிடம் தென்பட்டது. அன்றிருந்த அரசு சுவரில் நசுக்கப்பட்டிருந்தது.

அதனால் தான் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

அதன்போது எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து அரசாங்கத்தைக் கையளிக்க ஜனாதிபதி முயற்சித்தார். ஆனால் அந்த சவாலை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் தயாராக இருக்கவில்லை. உலகிலேயே முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் மற்றொருவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது கூட கின்னஸ் சாதனையாகவே கருதுகிறேன்.

அதன்பின்னர் முன்னாள் ஜனாதிபதி என்னை நாட்டை பொறுப்பேற்க அழைத்தார். நான் பதவி கேட்கவில்லை. ஆனால் அப்போது நாடு நெருக்கடியில் இருந்தது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். அதன்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் குறுகிய கால தீர்வுகளை வழங்க முடிந்தது. வரிசையில் நிற்கும் நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டது.

நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அந்த சமயம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு வழிகளில் உதவினர். ஜனாதிபதி என்ற முறையில் நாட்டின் பொருளாதாரத்தை என்னால் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் செயற்பட்டார்கள். அப்போது என்னுடன் சவால்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், எம்பிக்களும் இருந்தனர். தொழில் வல்லுநர்கள் எமது திட்டங்களை ஆதரித்தனர்.

கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இந்த செயற்பாட்டை சீர்குலைக்க பல்வேறு நபர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த கடன் மேம்படுத்தல் திட்டம் நிறுத்தப்பட்டால், வங்கிகள் உட்பட அனைத்து துறைகளும் ஒரு வாரத்தில் வீழ்ச்சியடைந்து விடும்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி அபிவிருத்தி செய்வதற்கு தனியார் துறைக்கு திறந்த பொருளாதாரம் அவசியம். பொருளாதாரம் வேகமாக முன்னேற, நிதி மற்றும் மனித மூலதனம் இருக்க வேண்டும்.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். மாகாண சபை மட்டத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான சட்டங்களை கொண்டு வர முடியும். பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள சட்டத்திற்கு இணங்கும் வரையில் ஆளுநர் அந்த பல்கலைக்கழகத்தை ஏற்றுக்கொண்டு நிறுவுவதற்கான சட்டங்களை நாம் கொண்டுவருவோம்.

நிதி மூலதனம் மற்றும் மனித வள மூலதனம் இல்லாமல், ஒரு நாடு துரித பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. மேலும், போட்டித்தன்மை மிகுந்த பொருளாதாரம் தொடர்பான கனவுகளையும் காண முடியாது. எனவே இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின்(OPASL) நாம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான மனித வளங்களை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளில் பெரும் பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.” என ஜனாதிபதி தெரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
தேவை ஏற்படின் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்ப...
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே சிறந்தது - பொது பாது...