வற் வரி அறவீட்டில் மேலும் விலக்களிப்பு!

Thursday, October 27th, 2016

 

சுகாதாரத்துறை, வீடமைப்புத்துறை மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பன வற் வரி அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தாத வகையிலேயே வற் வரியில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இதனூடாக இவ்வருடத்தில் 180 கோடி ரூபா வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார். வற் வரி திருத்தத்தின் மூலம் 1000 கோடி ரூபாவை வருமானமாக எதிர்பார்த்திருந்தோம்.

எனினும் மே மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தியதால் எதிர்பார்த்த வருமானம் 600 கோடி ரூபாவாகக் குறைந்தது. இருந்தபோதும் 180 கோடி ரூபா வருமானத்தையே ஈட்டமுடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வற் வரி திருத்தச்சட்டமூலம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய கைவிடப்படவேண்டிய நிலைக்குச் சென்றது. இதனால் புதிய வற் வரித் திருத்தம் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று (26)நடைபெற்றது. இவ்விவாதத்தை நிதி அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.

மருத்துவ பரிசோதனைகள், சத்திரசிகிச்சை மற்றும் குருதிமாற்று சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு “வற் “வரி அறவிடப்படவிருப்பதாக பிழையாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், மக்களின் நன்மையைகருத்தில் கொண்டு வற் வரியிலிருந்து இவை நீக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கான வருமானத்தை ஈட்டும் நோக்கிலேயே வரி அறவீடை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கட்டட நிர்மாணத்துறை விருத்தியடைந்து வருவதால் அவற்றுக்கான வரி அறவீட்டை நீக்கியிருப்பதுடன், ஸ்மார்ட் போன்களுக்கான வரி அறவீடும் நீக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வற் வரி அறவீட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களுக்கு வற் வரி அதிகரிக்கப்படாது.

அதேநேரம், புகையிலை, மதுசாரம் ஆகியவற்றுக்கான வற் வரி அதிகரிக்கப்படுகிறது. 74 அத்தியாவசியப் பொருட்கள் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: 2015ஆம் ஆண்டு ஜனவரியின் பின்னர் வற் வரி கோப்புக்கள் அதிகரித்துள்ளன. 694000 ஆகக் காணப்பட்ட வற் வரி கோப்புக்கள் தற்பொழுது 14 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 1998ஆம் ஆண்டு நாட்டின் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 வீதமாகக் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டில் இது 10.3 வீதமாக வீழ்ச்சி கண்டது. இருந்தபோதும் இவ்வருடம் தேசிய வருமானத்தை 14 வீதங்களாக அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வற் வரியை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை. இருந்தபோதும் கடன்சுமையை குறைக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் விருப்பமில்லாதபோதும் வரி அறவீட்டை அதிகரிக்கவேண்டியுள்ளது. பொருளாதாரம் சரியான பாதையில் முன்னேறிச் செல்ல ஆரம்பித்ததும் வரி அறவீடுகள் விரைவில் குறைக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வெள்ளைக்காரர்கள் எமக்குக் கூறத்தேவையில்லை. வருமானம் ஈட்டும் செயற்பாட்டில் நாம் சரியான பாதையில் செல்கிறோம். இம்மாதம் இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இதனைக் கண்டுள்ளனர். நாட்டின் நன்மைக்காக வடகொரியா எதையாவது கூறினால் அதனையும் நாம் பின்பற்றுவோம்.

இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட சகல திணைக்களங்களின் கோப்புக்களை பேணும் முறை உள்ளிட்டவை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிணைக்கப்பட்ட கணக்கு முறையொன்றை எதிர்வரும் மாதங்களில் செயற்படுத்த முடியும். இதனூடாக தேசிய வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்தில் மத்தள விமானநிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வீண் செலவுகள் அதிகரித்திருந்தன. இவற்றுக்காகப் பெறப்பட்ட கடன்கள் மீள செலுத்தப்படவேண்டியுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்காத வகையில் வற் வரியில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

col1-13190213156_4898016_26102016_kaa_cmy

Related posts: