வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் – வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களையும் அமைக்குமாறும் துறைசார் அமைச்சிடம் கோரிக்கை!

Wednesday, June 22nd, 2022

அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பெற்றோல் நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் நாட்டில் டொலர் கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நேரத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள டொலர்கள் அல்லது பிற வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொணர இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை தினம் நாட்டை வந்தடைய உள்ளது. இதற்கமைய நாளைமறுதினம்முதல் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள கனிய எண்ணெய் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரண்வல, மசகு எண்ணெய் இன்மையால் நாளை மறுதினம் முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள மூடவேண்டிய நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதுமான அளவு எரிபொருள் கிடைக்காமையால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பகலிரவாக பொதுமக்கள் வீதியில் பல கிலோமீற்றர்களுக்கு வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: