வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

Monday, December 27th, 2021

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டது.

குளியாபிடிய வடமேல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அலரி மாளிகையிலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக நினைவு பலகையை திறந்து வைத்தார்.

இத்திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அந்நிதியை சலுகை கடன் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வடமேல் பல்கலைக்கழகத்தின் குளியாபிடிய மற்றும் மாகந்துர வளாகங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

குளியாபிடிய வளாகத்திற்கு 1942 மில்லியன் ரூபாயும், மாகந்துர வளாகத்திற்கு 1973 மில்லியன் ரூபாயும் செலவிடப்படவுள்ளதுடன், தற்போதுள்ள பீடங்களுக்கான கட்டிடத் தொகுதிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மேலும் 262 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துடன் வடமேல் பல்கலைக்கழகத்தின் குளியாபிடிய வளாகத்தில் புதிய நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவும் இன்று இடம்பெற்றது. அதற்கான செலவு 259 மில்லியன் ரூபாயாகும்.

நாட்டின் சமூக பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் தொழில் ரீதியில் திறமையான பட்டதாரிகளை உருவாக்குவதற்காக பல்கலைக்கழக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் உயர் கல்வி பிரிவினூடாக இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக சமூகம் மற்றும் சூழவுள்ள சமூகத்தினருடன் நெருக்கமான தொடர்பை மேம்படுத்தல் மற்றும் கிராமிய பிரதேசங்களை பலப்படுத்துவதன் ஊடாக குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: