யாழ். மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாளை வழங்கப்படும் – வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, July 9th, 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி  இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகளை வழங்குவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியேற்றும் திட்டத்தில் 2 ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் வழங்கப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 465 பேருக்கும், 6 ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 457 பேருக்கும், 7ஆம் திகதி மூன்றாம் நாளில் 12 ஆயிரத்து 34 பேருக்கும், 8 ஆம் திகதியான நேற்றையதினம் நான்காம் நாளில் 7 ஆயிரத்து 497 பேருக்கும் என மொத்தமாக 38 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: