யாழ்.நீதிமன்றத்தை மக்கள் தாக்கியமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியே காரணம் –  ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் அவருக்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2017

வித்தியா படுகொலையைத் தொடர்ந்து கொதிப்படைந்த மக்கள் யாழ்.நீதிமன்றக்கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அக் காலத்தில் ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த சப் இன்பெக்டர் குயின்ரஸ் ரோனால் பெரேராவே காரணம் என ட்ரயல் அட்பார் தீர்ப்பயம் தெரிவித்தது.

வித்தியா கொலை வழங்கின் சந்தேகநபரான சுவிஸ் குமாரை அப்போது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத காரணத்தினாலேயே மக்கள் கொதிப்படைந்தனர் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.

யாழ்.நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற தீர்ப்பாயத்தின் சாட்சியப் பதிவுக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி பரிசோதகர் குயின்ரஸ் ரோனால் பெரேரா நேற்று ஆஜராகினார். அவர் சாட்சியம் அளித்த போது சுவிஸ் குமார் தொடர்பாக மழுப்பலான பதில்களை வழங்கிக் கொண்டிருந்தார். அவரது செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீர்ப்பாய நீதிபதிகள் அவரைக் கடும் தொனியில் எச்சரித்தனர்.

மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் எட்டு சந்தேகநபர்கள் குறித்தும் திருப்திகரமான சாட்சியங்கள் வழங்கிய போதிலும் 9வது சந்தேகநபரான சுவிஸ் குமார் தொடர்பில் மழுப்பலான முறையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

“9வது சந்தேகநபரைத் தான் கைது செய்யவில்லை எனவும் அவர் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவரை மன்றில் முன்னிலைப்படுத்தவில்லை” எனவும் அவர் தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

எனினும் இதனை அவதானித்த தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கடும் தொனியில் அவரை எச்சரித்தனர். “உமது பகுதியில் நடைபெற்ற இந்தப் பாரதூரமான சம்பவம் நடைபெற்றபோது நீரே பொறுப்பதிகாரி. 9வது சந்தேகநபரைக் கைது செய்யுமாறு கோரப்பட்ட போது நீர் கைது செய்யவில்லை.. வெள்ளவத்தைப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது குற்றச் செயல் தொடர்பான பொலிஸ் அறிக்கை அவர்களால் கோரப்பட்டது. நீர் அது தொடர்பான விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளீர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்த தவறியதாலேயே மக்கள் கொதிப்படைந்து யாழ்ப்பாண நீதிமன்றைத் தாக்கினர். நீதிமன்றைத் தாக்கியமைக்கும் உமது செயற்பாடே காரணம். 9ஆவது சந்தேகநபர் தொடர்பான விவரங்களை நீர் நீதிமன்ற விசாரணைகளில் மறைத்துள்ளீர்.

8 சந்தேக நபர்களைக் கைது செய்த நீர் மிகப் பாரதூரமான ஒரு கொலைக்குற்றம் நடந்த வேளையில் 5.19.2015 அன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறை பெற்று மகரகம நீதிமன்றத்துக்கு சென்றது பாரதூரமான பொறுப்பற்ற செயல். மகரகம நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு இலக்கத்தை ஒப்படைக்க வேண்டும் என கடும் தொனியில் நீதிபதிகள் எச்சரித்தனர்

Related posts: