யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Saturday, November 13th, 2021

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: