யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ள செய்கையாளர்கள்!

Thursday, September 2nd, 2021

இலங்கையின் பொருளாதார பயிராக காணப்படும் புகையிலை செய்கையில் இம்முறை வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகளவு செய்கைபண்ணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்போக நெல் செய்கை ஒருபுறம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மறுபுறம் புகையிலைச் செய்கையிலும் செய்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலை காணப்படுகின்றது.

பருவ நிலை சீராக காணப்படுவதாலும் கடந்த ஆண்டு உற்பத்தியில் குறித்த செய்கை தம்மை ஏமாற்றமடையாது பாதுகாத்ததாலும் இம்முறை புகையிலை செய்கையை பயிரிடுவதில் அதிகளவானோர் மிகுந்த நம்பிக்கையுடன்  ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தை பொறுத்தளவில் வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிழான், புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, ஈவினை, வயாவிளான், குரும்பசிட்டி, அச்செழு, புத்தூர், நவக்கிரி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய், சுன்னாகம், கந்தரோடை, மருதனார்மடம், இணுவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும் அதிகளவான விவசாயிகள் பல ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் புகையிலைச் செய்கை மேற்கொள்ள தயாராகியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்தினதும்  இறுதிப்பகுதியில் புகையிலை பயிரிடப்பட்டு பங்குனி அல்லது சித்திரை மாதம் அளவில் அறுவடைசெய்யப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இயற்கையும் இம்முறை சிறப்பான ஒத்துழைப்பை வழங்குவதாலும் கடந்தமுறை புகையிலைக்கு அதிக கேள்வி கிடைத்துள்ளதாலும் அதற்கான பொருளாதார ஈட்டலும் தமக்கு சிறப்பாக கிடைக்கப்பெற்றதனால் இம்முறையும் குறித்த பயிர் செய்கையில் அதிகளவான செய்கையாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளதாக  புகையிலை பயிர் செய்கையாளர்கள் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: