யாழ்ப்பாணத்தில் தொழில் தேடுவோரை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பம் – மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Wednesday, September 14th, 2022

யாழ் மாவட்டத்தில் தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோரை பதிவு செய்யும் நடவடிக்கையை மாவட்ட செயலகம் ஆரம்பிக்கவுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமானது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வம் கொண்டிருப்போரை பதிவு செய்யவிருக்கின்றது.

இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், நல்லூர் , கோப்பாய் , சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளூடாகவும் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்கள் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளும் விண்ணப்பப் படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 20 ஆம் செவ்வாய்க்கிழமை அன்று அல்லது அதற்கு முன்பதாக கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க முடியும்.

பதிவுகள் தொடர்பான மேலதிக விபரங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படுமிடத்து 0212219359 என்ற தொலைபேசியூடாக பெற்றுக்கொள்ளலாம். எனவே தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: