யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

Saturday, September 11th, 2021

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற பெண்ணே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 4 ஆம் திகதி, குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலும், இதன்போது குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அந்த கர்ப்பிணிப்பெண்,  ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்.

அதன்பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்த இறப்பு விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

இந்நிலையில் சடலம் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: