யாசகம் எடுத்தாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம் – நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Wednesday, November 18th, 2020

இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் கூறுகின்றார். வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யாசகம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதேபோன்று, அவர்களை வழிநடத்தும் பிரதான நபர்களையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உண்மையாக யாசகம் பெறுவோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பில் சமூக சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: