முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது காங்கேசன்துறை துறைமுகம் – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசு இணக்கம்!

Wednesday, March 20th, 2024

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அமைச்சில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நுழைவதற்கு ஏற்ற வகையில் துறைமுகம் 30 மீட்டர் ஆழப்படுத்தப்படவுள்ளதுடன், புதிய அலை தாங்கியை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிக அளவிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரவும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: