மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, March 19th, 2022

மின் உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், வார இறுதி நாட்களிலும், நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

வார இறுதியில், சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றையதினம் 3 மணிநேரமும், 45 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

குறித்த வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரமும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

P முதல் W வரையான வலயங்களில், முற்பகல் 10 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், மூன்று மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முற்பகல் 10 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதியில், ஒன்றரை மணிநேரமும், மாலை 4மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்துண்டிப்பு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் A முதல் L வரையான வலயங்களில் மூன்று மணிநேரமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில், 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் நாளைய தினம் மாலை 4.30 முதல் இரவு 9.30 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: