மாகாணசபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் !

Thursday, March 18th, 2021

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கும் மாகாண சபைகளை செயல்படுத்துவதற்காக தேர்தலை புதிய அல்லது பழைய முறையில் விரைவில் நடத்த வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதேநேரம் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு தமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாகாண சபை தேர்தலை பழைய முறைப்படி நடத்த வேண்டும் என்பதே தமது கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் கருத்து என ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்படுவதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேநேரம் உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறையை மீளாய்வு செய்து, புதிய தேர்தல் முறையை பரிந்துரை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் அனைத்து மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற ஆணையர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளையதினம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: