மகன் முன்னிலையில் தாய் அடித்துக் கொலை – கோப்பாயில் சம்பவம்!

Monday, October 15th, 2018

கோப்பாய் பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை தடுக்க சென்ற தாய் ஒருவரை, பொல்லுகள் மற்றும் கம்பிகள் கொண்டு கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், 8 பேர் கொண்ட குழு ஒன்று குறித்த கொலையைச் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தின்போது, 58 வயதுடைய சந்திரராசா விஜயகுமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொலையுண்ட தாயாரின் மகன் குறிப்பிடும்போது, இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக்கொண்டனர்.

அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர். கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள்.

அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் தாக்கினர். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: