பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி !

Thursday, February 4th, 2021

நாடாளுமன்ற பேரவையின் 6 ஆவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக சிலரை நியமிப்பதற்கு பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுதன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸனாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கு, 2002ஆம் ஆண்டு 35ஆம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்ட பெயர்களுக்கு பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் ஜனக ரத்னாயக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சதுரிகா விஜேசிங்க, மொஹான் சமரனாயக்க, உதேனி விக்ரமசிங்க, பேராசிரியர் ஜனக ஏக்கனாயக்க ஆகியோரை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: