புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை!

Monday, April 5th, 2021

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கியதாக உறுதிபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் தொகையை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டிலேயே அழிக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொகையை மீள் ஏற்றுமதி செய்யாது நாட்டிலேயே அழிக்க முடியுமா? என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை மீள் ஏற்றுமதி செய்யாது நாட்டிலேயே அழிக்க முடியும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வாவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் அவற்றை அழிப்பதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அவ்வாறு செய்ய முடியாதென சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும் சீமெந்து உற்பத்தி நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு இணங்க குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 95 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்கு தயாராகவுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய குறிப்பிட்டுள்ளதுடன் இதற்காக இரண்டு கப்பல்கள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: