புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் – யாழ். பல்கலை சமூகம் தெரிவிப்பு!
Wednesday, April 19th, 2017
மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பதவியேற்கும் துணைவேந்தர் இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வார் என மாணவர்கள் எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இப்போது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு முடிந்தவுடன் வெளியே வேலை செய்வதற்கு கணனி மற்றும் ஆங்கில அறிவு தேவைப்படுகின்றது. அதனை முறையாகக் கற்பதற்குத் தனித்தனி அலகுகள் வேண்டும். உள்ளக விளையாட்டில் எமது மாணவர்கள் பிரகாசிக்க வேண்டுமாயின் அதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு உள்ளக விளையாட்டுத் திடல் வேண்டும்.
சிறப்புத் தேவைக்குரிய மாணவர்கள் பயன்படுத்தும் கற்றல் சாதனங்கள் முழுமையான தொழிற்பாட்டை வெளிப்படுத்தக் கூடிய வகையில் திருத்தி அமைக்கப்படவேண்டும். அரசியல்துறை பாடம் உட்படச் சில பாடங்களுக்கான விரிவுரையா ளர்கள் வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. விடுதிகளில் உள்ள மலசல கூடங்களை உரிய முறையில் சீர்செய்யவேண்டும் – என்றார்.
புதிய துணைவேந்தர் பதவியேற்பு தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாவது,
கல்வி சாரா ஊழியர்களின் பெரும்பாலான நியமனங்கள் கடந்த 10 வருடங்களாக அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டிலேயே நடைபெற்று வருகின்றன. இதனால் திறமையானவர்கள் கூட நேர்முகத் தேர்வில் வெளியேற்றப்படும் நிலை காணப்படுகின்றது. நாம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இருப்பதால் எமது சம்பள உயர்வு சார்பான விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்து பீடங்களிலும் வெளிமாவட்ட மற்றும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கைப் பரம்பல் 50 வீதத்திலும் அதிகமாக உள்ளது. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது. எனவே இது தொடர்பாகவும் புதிதாக பதவியேற்கும் துணை வேந்தர் கவனத்திற் கொள்ளவேண்டும் - என்றனர்.
Related posts:
|
|