புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

Saturday, September 19th, 2020

கொக்கல்ல சுதந்திர வர்த்தக வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

நீரிழிவு நோய்க்கான இன்சுலின் ஊசி மருந்து உட்பட 33 ஊசி மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை திறக்கப்பட உள்ளது. கொக்கல்ல சுதந்திர வர்த்தக வலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகளை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.

அத்துடன் இரண்டு வருடங்களில் இந்த தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் சர்வதேச தரத்திலான மருந்துகள் என தரச்சான்றிதழ் வழங்கப்படுவதுடன் ஜப்பானின் முறைமை தரநிர்ணயத்திற்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.

உள்ளூரில் இந்த ஊசி மருந்து உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த ஊசிமருந்து கொள்வனவுக்காக வருடாந்தம் அரசாங்கம் செலவிடும் தொகையில்10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீதப்படுத்த முடியுமென அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சில ஊசி மருந்துகள் உள்ளூர் மருந்தகங்களில் 1,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் இலங்கையில் உற்பத்தியாகும் போது 450 ரூபாவிற்கு அதனை வழங்க முடியும் எனவும் அருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக் கிணங்க மருந்து உற்பத்தியில் நாடு தன்னிறைவு காணவும் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான மருந்துகளை பெற்றுக்கொடுப்பதுமே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் மேற்படி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: