பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் விவகாரம் -இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி!

Tuesday, January 3rd, 2023

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

கஞ்சிபான இம்ரான் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றது அவதானம் மிக்க நிலையாகும்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையின் புலனாய்வு வலைப்பின்னல் குறித்த அவதான நிலை எழுப்பப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

எனினும், இலங்கையின் புலனாய்வு வலையமைப்பில் உள்ள குறைபாடுகள் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

2022 டிசம்பர் 25 ஆம் திகதியன்று ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையோரத்தில் இறங்கியதாக கூறப்படும், கஞ்சிபான இம்ரான் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை தேடுமாறு தமிழக உளவுத்துறை மாநிலம் முழுவதும் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொலைகள், குற்றங்கள், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் இம்ரான், 2019 இல் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தநிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் இலங்கை நீதிமன்றத்தினால், 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

பிணையில் வெளியில் வந்த பின்னர், இம்ரான் இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய புலனாய்வு அமைப்புகள், தமிழக மாநில உளவுத்துறைக்கு அறிவித்திருந்தன.

அவர் மாறுவேடத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி தலைமன்னாருக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பர்கள் செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஞ்சிப்பான இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வது குறித்து இலங்கையில் இருந்து முறையான தகவல் எதுவும் இல்லை.

எனினும் இந்திய உளவுத்துறை அமைப்புகள் அவரது இயக்கம் குறித்து நம்பகமான தகவல்களைப் பெற்று எச்சரிக்கையை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: