பாரம்பரிய விவசாய நாடான இலங்கை அதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு – நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதி இன்று விசேட உரை!

Wednesday, March 16th, 2022

பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளன.

அவை தொடர்பான அறிவையும் தரமான உற்பத்திகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்  பெரும் போகத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், மாவட்ட மட்டத்தில் 48 சேதனப் பசளை உற்பத்தியாளர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு உரங்களை விநியோகிக்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதனை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டினார்.

“எதிர்காலச் சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்கும் நோக்கத்தில், பசுமை விவசாய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இரசாயன உரங்கள் மற்றும் களைக்கொல்லிகளுக்குப் பழக்கப்பட்ட விவசாயிகளைச் சேதனப் பசளை விவசாயத்தில் ஈடுபடுத்துவது சவாலான ஒரு பணியாகும்.

எவ்வாறாயினும், அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் மற்றும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு, வெற்றிகரமான முடிவுகளை அடைய முடியும்” என்ற நம்பிக்கையை ஜனாதிபதி இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்..

“விவசாயிகளை உரிய முறையில் தெளிவுபடுத்துவதுடன், உரிய நேரத்தில் தரமான உரங்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்பதனையும் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி “கடந்த சில அரசாங்கங்களுக்கு விவசாயத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால், பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே எனது நோக்கமாகும்” என்பதனையும் தான் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், வாரத்திற்கு 2 தடவைகள் அரசாங்க அதிபர்கள் தலைமையில் உரக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றையதினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரை தொலைக்காட்சியில் நேரலையாக காண்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்த்கது.

000

Related posts: