பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!

Tuesday, June 27th, 2023

யாழ்.சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் யாழ்.காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதரஷன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையடித்த இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதான சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபர்கள் சுன்னாகம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார்.

மேற்படி இரு பொலிஸ் பிரிவுகளிலும் அண்மைய நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: