பரீட்சை முடிவுகள் விரைவில் வெளிவரும் –  அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Friday, September 23rd, 2016

இலங்கையின் கல்வித் துறையில் பாரிய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைப் முடிவுகளை கூடிய விரைவில் வெளியிடுவதற்கு பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

‘கல்வித் துறையில் பாரிய மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடத்தலில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  13 வருட தொடர்ச்சியான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகக் கல்வியை சர்வதேச தரத்துக்கமைய மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதற்கமைய க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் விரைவாக வெளியிடப்பட்டால் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை உள்வாங்குவதை விரைவு படுத்தி பட்ட படிப்பை விரைவாக நிறைவு செய்து குறைந்த வயதில் பட்டதாரியாகும் நிலைமையை உருவாக்க முடியும்.

பல்கலைக்கழக கிராமங்களை உருவாக்கி பல்கலைக்கழகம், கல்லூரி, பல்பொருள் சந்தை, வைத்தியசாலை ஆகியவற்றை அதில் உள்ளடக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறாக கல்வித் துறையில் பாரிய மாற்றங்களை செய்ய அரசு தயாராக உள்ளது’ என்று தெரிவித்தார்.

Agilaviraj-kariyavasam-014

Related posts: